Alagiyaithal Chat


எந்த இடத்தில் விழுந்திருக்கிறோம்?



இளைஞர்கள் இருவர் இருந்தனர். அவர்களுக்கு வேட்டையாடுவது என்றால் அவ்வளவு விருப்பம். எனவே, அவர்கள் இருவரும் அடிக்கடி காட்டுக்குச் செல்வது வழக்கம். ஒருநாள் சிறிய விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வேட்டையில் இரண்டு காட்டு எருமைகள் கிடைத்தன. அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டனர்.

இரண்டு காட்டு எருமைகளையும் விமானத்தில் ஏற்ற முடியாது, எடை அதிகம் என முரண்டு பிடித்தார் விமான ஓட்டுனர். உடனே இளைஞர்கள் இருவரும், “கடந்த வாரமும் எங்களுக்கு இதே போல் இரண்டு எருமைகள் கிடைத்தன. அப்போது எங்களுடன் வந்த விமான ஒட்டுனர், இரண்டையும் ஏற்றிக்கொள்ள சம்மதித்தாரே!” என்றனர்.

வேறு வழியின்றி இரண்டு எருமைகளையும் ஏற்ற சம்மதித்தார் ஓட்டுனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பாரம் தாங்காமல் தடுமாறி வயல்வெளியில் விழுந்தது.

உள்ளே இருந்த இளைஞர்கள் இருவரும் பலத்த காயங்களுடன் மெல்ல வெளியே வந்தனர்.

ஒருவன் கேட்டான் 'இப்ப நாம எந்த இடத்துல விழுந்திருக்கோம்?”

அடுத்தவன் பதில் சொன்னான் : 'போன வாரம் விழுந்தோமே, அதுக்குப் பக்கத்து வயல்லதான்!”

இது வேடிக்கை கதை தான்! ஆனால், விளக்குகின்ற உண்மை மிகப் பெரியது. அனுபவங்களைப் பாடமாக எடுத்துக்கொள்ளாவிட்டால் அடிக்கடி விழவேண்டி இருக்கும். தவறு செய்யாதவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது, அவர்கள் மகான்கள்! ஆனால், செய்த தவறை திரும்ப திரும்ப செய்வது மகா தவறு!

அதே தவறைத்தான் திரும்பவும் செய்கிறோம் என்பதை செய்து முடித்து வினையை அனுபவிக்கும்போது தான் மெல்ல விளங்கிக்கொள்ள ஆரம்பிக்கிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், விழுந்த இடத்திலேயே திரும்ப விழும்போதுதான் அட ஏற்கனவே இங்கே தானே ஒரு முறை விழுந்தோம் என்ற ஞாபகம் வருகிறது.

முதல் முறை செய்வது தான் தவறு, திரும்பவும் செய்தால் அது தப்பு! “தவறு செய்தவன் திருந்தப் பார்க்கனும், தப்பு செய்தவன் வருந்தியாகனும்!” (என்னைப் போல!)

0 comments:

Post a Comment